Friday, July 13, 2012

ஒரு நாள் ராஜா பார்க்க வேண்டுமா..?

முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராய்  வருவார்  .. இதை  ஒரு கதைக்களமாக  அந்த படத்தில் அமைத்திருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே ஒரு நாள் ராஜா சிஸ்டம் அறிந்திருக்கிறீர்களா?

திருநெல்வேலி  மாவட்டம்   பாபநாசம் - காரையாறு மலைப்பகுதியில் உள்ள காணிக்குடியிருப்பு  சொரிமுத்து அய்யனார் கோவிலில் இந்த காட்சியை பார்க்கலாம்..

இந்த கோவிலை சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகின்றனர்.. வருகிற ஆடி அமாவாசை ( ஜூலை 6 - செவ்வாய்க்கிழமை   )அன்று இங்கு மாபெரும் திருவிழா நடக்கும். இந்த திருவிழாவில் ஜமீன் அவர்கள் தான்  மன்னராய்   இருந்ததை குறிக்கும்  வகையில்  பழங்காலத்து  மன்னர்  உடையிலேயே உடைவாள், மெய்க்காவலன்  சகிதம்  அரியணையில்  வீற்றிருப்பார் ... மக்கள் அவரை பார்ப்பதும் வணங்குவதும் நம்மை மன்னர் காலத்திற்கே அழைத்து செல்லும் அந்த காட்சி.

இந்த ஒரு நாள் ராஜாவை பார்க்கையில் பலவிதமான சிந்தனைகள்  மனதிற்குள் ஓடுகின்றன..

மன்னர் என்பவர் இப்படி தான் இருந்திருப்பாரோ...மன்னர்களின் உடல் மொழி இப்படித்தான் இருந்திருக்குமோ.அவருக்கு காவலாக இருக்கும் மெய்க்காப்பாளர் பராக்கிரமசாலியை போல் மிகவும்  மிரட்டலாக இருக்கிறார்..வருடத்தில் ஒரு முறை இவர் மன்னராக வீற்றிருக்கும் நேரம் தவிர மற்ற நாட்களில் இவர் என்ன வேலை செய்வார் என்ற கேள்வியும் மனதில் எழும்..சாதாரணமாக மன்னர் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அந்த மெய்க்காப்பாளர் ஒரு பி.ஏ வாக செயல்படுகிறார்...அவரது முகம் எல்லோருக்கும்  நன்கு தெரியும் வண்ணம் சோடிய விளக்குகள் ஜொலி ஜொலிக்கும்..அவரது தலையின் பரிவட்டம் வசந்த மாளிகை சிவாஜி கெட்டப்பை நினைவு படுத்தும் ..தலைக்கு மேல் கதைகளில் வரும் வெண் கொற்றக்குடை  போல் ஒரு கலர் கொற்றக்குடை விரிந்திருக்கும் .பக்த கூட்டமே சாமியாடிகளை வணங்கும் வேலையில் சாமியாடிகள் அங்கு மன்னரை வணங்கிக்கொண்டிருப்பார்கள்..மேல தாளத்துடன் மன்னர் தரிசனத்தை மக்கள் ஆவலாக பார்ப்பதும் அவர் உடை பற்றி பேசுவதும் அவரது முதுமை பற்றி விமர்சிப்பதும் வரலாறில் நாம் எழுத்தாய் படித்ததை காட்சியாய் கண்ணில் வரும்..
விழா முடிந்த பிறகு அந்த மன்னரையும் மெயக்காப்பாளனையும் எங்கு பார்த்தாலும் அந்த மன்னர் கோலம் தான் நினைவுக்கு வரும்.

எத்தனை மக்கள் ஏன் என்று கேட்காமல் அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறோம்...அப்படிஎன்றால் அவருக்கு சகல அதிகாரமும் இருக்கும் போது அவரது அதிகாரம் எப்படி இருந்திருக்கும். பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் எழுத்து சுதந்திரம் எல்லாம் இவர்கள் நிர்ணயித்த அளவுகளிலேயே நின்றிருக்கும்..

வரலாற்றை  கண்முன்னர் காட்சிப்படுத்திக்கொண்டே  அவர்கள் நமக்கு சொல்லும் செய்தி
" சுதந்திரம என்பதை என்ன வென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்" 

மன்னரை  பற்றி

சிங்கம்பட்டி மன்னர் 32-வது பட்டம் மேதகு தென்னாட்டுப் புலி, நல்லகுட்டி, சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா பட்டத்துக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஆண்டுதோறும் அரசவை தர்பார் கொலுவில் வீற்றிருந்து ராஜ தரிசனம் தருகிறார்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் தேவஸ்தான அறங்காவலர் என்ற முறையில் ஆண்டுதோறும் கோயில் பெருவிழா நடைபெறும் ஆடி அமாவாசை தினத்தன்று ராஜ தர்பார் நடத்துகிறார். இதைக் காண திரளான கூட்டம் வருகிறது.

சிங்கம்பட்டி அரசு கி.பி. 1100-ல் உதயமானது. பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. விஜயநகர மன்னர் காலத்தில் கி.பி. 1433-ல் பாளையமாகத் திகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1802-ல் ஜமீன்தாரியாக மாறியது. 900 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்தது சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானம். 1948-ல் ஜமீன் ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. சிங்கம்பட்டி சமஸ்தானத்தை 31 மன்னர்கள் பட்டம் தரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். தற்போது உள்ளவர் 32-வது "மன்னர்'.