ஓடும் நதியோரத்தில் பாதி மூழ்கிய கிளை
ஒட்டு மொத்த நதியின் நீளத்திலும்
நனைந்துகொண்டேயிருக்கிறது
பூக்களின் தாவணியில்
இயங்கும் கண்களாக
மது அருந்தும் வண்டுகள்
எந்த மழைக்கும்
மணக்காத தரையே வாய்த்திருக்கிறது
இந்த வனத்திற்கு
பகலின் வெப்பம் இறங்க அனுமதிக்காத
மரங்களின் தளவாய்த்தனங்களில்
தாழ்வு கொள்கிறான் சூரியன்
எப்பொழுதேனும் விலகி விழும் வெயிலால்
வெந்நீர் ஆக்க முடியவில்லை
இந்த நதியை
இருந்தாலும்
என் நிழலின் வடிவத்தில்
ஒரு புதுக்குளிர்ச்சி கண்டு ஓடுகிறது
கடல்நோக்கி ஓடும் நதி!!
நதி ஓடும் கரையில் விழுந்த
கண்ணீர் துளி
சமுத்திரம் வரை பயணப்படும்
வழியில் நீர் அருந்தும்
யாருக்கும் உவர்ப்பைக் கொடுக்காமல்!