Sunday, June 24, 2012


மெழுகுவர்த்தி திருடர்கள்

பால்யத்தின் நினைவுகளை அசை போடுவதே தனி அலாதி தான்..

கார்த்திகை மாதத்தில் எல்லோர் வீட்டிலும் தீபம் அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள்...கால் சட்டையுடன் நாங்கள் திரியும் பருவத்தில் எங்களுக்கு அன்று தான் நல்ல மெழுகுவர்த்தி வேட்டை... இரவு பத்து மணிக்கு துவங்கும் மெழுகுவர்த்தி வேட்டை...

காற்றில் அணைந்த பாதி மெழுகுவர்த்திகள் எங்களால் சூறையாடப்படும் .எவனாவது கால்சட்டை பை நிறைய மெழுகுவர்த்தி துண்டுகளை காட்டி பெருமிதம் கொண்டால் நெஞ்சு பொறுக்காது; போருக்கு செல்லும் வீரர்கள் போல் புறப்பட்டு விடுவோம் மெழுகுவர்த்தி சேகரிக்க...இல்லை இல்லை திருட..

மெழுகுவர்த்தி வேட்டையின் முக்கியமான இடம் கல்லறையில் திருடுவது தான்...இந்த இடத்தில் வேண்டுமானால் சேகரித்தல் என்று போட்டுக்கொள்ளலாம்..

கார்த்திகை தீப திருநாள் அன்று  கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

கல்லறைக்கு மாலையிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஐந்து நிமிடத்தில் அங்கிருந்து திரும்பிவிடுவார்கள்..காற்றும் எங்களுக்கு தோதுவாக ஒன்றிரண்டை விட்டுவிட்டு பிற மெழுகுவர்த்திகளை அணைத்துவிடும் ..

கல்லறையில் மெழுகுவர்த்தி திருடும் போது கல்லறை பற்றிய அச்சம் கொஞ்சமும் இருக்காது...இறுதி யாத்திரை வண்டி போனால் கூட கால் சட்டையை தொப்புளுக்கு மேல் ஏற்றும் பயம் அன்று மட்டும் எங்கோ போய்விடும்..

கால்சட்டை பை மேல் சட்டை பை எல்லாவற்றிலும் மெழுகுவர்த்தி நிரப்பி வீட்டிற்கு கொண்டு வருவோம்...

வீட்டிற்கு வந்த பின் தான் பெண் பிள்ளைகளின் பங்களிப்பு அதில் தொடங்கும்...

அதற்கென்றே வைத்திருக்கும் பழைய ஈய பாத்திரத்தில் மெழுகை காய்ச்சுவாள் அக்கா..

பின் தயாராய் வைத்திருக்கும் பப்பாளி இலை குழாய், தேங்காய் சிரட்டை,  பழைய சைக்கிள் பெல்  இப்படி பல அச்சுகளில்  மெழுகை ஊற்றி புதிய மெழுகுவர்த்தி செய்வாள்..

ஒரு மணி நேர தூக்கத்துக்கு பிறகே  கல்லறை பீதி வரும்...தூக்கம் தொலைந்தே போகும்...எண்டா என் மெழுகுவர்த்தியை திருடுனே என்று கல்லறை பிரேதங்கள் கேட்பது போல் தோன்றும்...

ஒரு வழியாய் கண்ணயர்ந்த அதிகாலை தூக்கத்தையும்  அக்காவே கலைக்கிறாள்..

எழுந்திரிடா..எழுந்திரிடா
என்று எழுப்பி...தினுசு தினுசாய் மெழுகின் வடிவத்தை காட்டி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவாள். நான் திருடிய சேகரித்த மெழுகுவர்த்திகள் புத்தம் புதிய வடிவத்துடன் என் கைகளில் தவழும்...
கல்லறை பீதி காணாமலே போகும் .

Tuesday, June 19, 2012

கைவசம் இருப்பது
ஒரே ஒரு
பட்டு சட்டை;
அழுக்கு பிடிக்கும் முன்
வாழ்க்கையை
முடித்துக்கொள்கிறது
 பட்டாம்பூச்சி

Sunday, June 17, 2012

அழைப்பிதழ்


உனக்கான வீதியில்
பல முறை
வந்திருக்கிறேன்

உன்னை விருபியவர்களின்
கூச்சல்,
உன்னால் நிராகரிக்கப்பட்டவர்களின்
ஓலம்
இவைகளுக்கு மத்தியில்
எப்படி நிம்மதியாய்
வசிக்கிறாய் நீ?

எனக்கான வீதியில்
ஒரே ஒரு முறை
வந்து பார்...

உனக்காக பூத்த பூக்கள்
எட்டு நாளுக்கு ஒரு பட்டாம்பூச்சி
என குடியமர்த்திவிட்டு
வெளியேறி விடுகிறோம்

நானும்,
எனது பொய்களும்

முதல் காதல் கடிதம்


கல்லூரி சுவற்றில்
உனது பெயரையும்
எனது பெயரையும்
இணைத்து கரி கொண்டு
கிறுக்கியிருந்தான்
ஒரு அநாமதேயன்.

நீயும் நானும்
எழுதாத
நமக்கான முதல் காதல் கடிதம்
அது!

நம்மை
ஆப்பிள் கடிக்க செய்த
அந்த சாத்தானை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்

கடவுள் கிரீடம்
சூட்டுவதற்காக!

பங்குனி உத்திரம்


ஐஸ் வியாபாரிக்கும்
ராட்டினக்காரனுக்கும்
பூசாரிக்கும் இது சீசன்

வெறி கொண்ட சாமியாடி
ஆட்ட முடிவில்
பிள்ளைகளுடன் சாப்பிடும்
கறி சாப்பாடு.

கடந்த ஆண்டையும்
இந்த ஆண்டையும்
ஒப்பிட்டு உரையாடும்
முதியவர்கள்.

பருவத்தின் கனவை
பார்வையால் பகிர்ந்து கொள்ளும்
இளசுகள்

தெய்வங்கள் உள்பட
எல்லாருடைய கவனத்தையும்
ஈர்க்கும் குழந்தைகள்

தொலைந்து போன
தூரத்து உறவுகளை
தேடி அலையும்
கண்ணீர் சொந்தங்கள்..

எல்லோருக்கும் சேர்த்து
சிலுவை சுமக்கின்றன
பங்குனி உத்திரத்துக்கு
நேந்து விடப்பட்ட
பலி ஆடுகள்

மோதிரக்குட்டு


நீ
என்றோ மாட்டி விட்டு
பின் கழற்றிப்போன
மோதிரத்துக்காக
இன்னமும் அழுகிறது
என் மோதிர விரல்

அது எந்த உலோகத்தில்
செய்யப்பட்டிருப்பினும்
என் உலகத்தில்
அது விலை உயர்ந்தது!

உன் கரங்கள் பட்ட பிறகு
அதற்கு ஒரு சுவாசமும்
சுவாச பையும்
முளைத்து விட்டது

பிடிதரம் அற்று
மடங்கி நிமிரும்
சுதந்திரம் அதற்கு
பிடிக்கவில்லை

கால் விலங்குக்கு
அடம்பிடிக்கும்
மன நோயாளியை போல்
இன்னமும்
அழுதுகொண்டே இருக்கிறது
அந்த விரல்.