Wednesday, July 10, 2013

முதல் காதல்

நீ பயணிக்கும்
ஒரே காரணத்துக்காக 
மகளிர் பேருந்தில் ஏறி
அசடு வழிந்திருக்கிறேன்!

உன் கண்முன்னே
கிளி ஜோசியக்காரனை
வம்புக்கு அழைத்து
ஆருடம் கேட்டிருக்கிறேன்!

கத்தாளை இலைகளில்
உன் பெயரும்
என் பெயரும்
சேர்த்து எழுத எடுத்துப்போன
கருவேல முட்களை கொண்டு
உன் பெயருடன் இணைத்து எழுதப்பட்ட
வேறு வேறு பெயர்களை
அழிக்க வேண்டியதாயிற்று!

நீ பெரிய மனுஷி ஆனதை
ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு திரிந்ததில்
உன் பெற்றோரை மிஞ்சியவன் நான்!

என்னை ஏற்றுக்கொள்ளாத
எல்லா தருணங்களும்
நினைவில் இருக்கிறது...
எவ்வளவு முயன்றும்
மீட்டெடுக்க முடியாத அளவுக்கு
சந்தோசம் மண்டிக்கிடக்கிறது
என்னை நீ ஏற்றுக்கொண்ட தருணம்!!

உன்னால் கவனிக்கப்படாதவை
என்று நான் எண்ணிய
அசட்டு தனங்களையும்,
அசட்டு தருணங்களையும்
உனக்குள் காதல் அரும்பிய
கணங்களையும்
சிணுங்கி சிணுங்கி
பட்டியலிடும்போது தான்
விஸ்வரூபம் கொள்கிறது
நம் காதல்!  


No comments:

Post a Comment