Monday, July 22, 2013

விடி

மழை வருமென்றும்
வராதென்றும்
ஆருடம்  சொல்லி சொல்லியே
கழிந்தது அந்த சாயங்காலப்பொழுது!

காலில் விழுந்து
ஆசீர்வதித்துக்கொண்டிருந்தன அலைகள்....

காவலர்களும் சுண்டல்காரர்களும்
நெருங்க இயலாத அளவுக்கு
இருந்தது எங்களுக்கு இடையேயான
நீண்டதொரு இடைவெளி...

இந்த காதல்
என் இளமையை
விலைமகளும் விலகி செல்லும்
விதத்தில் வேற்றுக்கிரகத்தில்
வைத்து பாதுகாக்கிறது 

நான் குடையோடு
வந்திருப்பது தெரிந்து
கண்களை மூடிக்கொண்டது வானம்!

நான் துணையோடு
வந்திருப்பது தெரிந்து
பொறாமையில் ஓடிவிட்டது மேகம்...

இது போன்றதொரு தருணங்களில்
மனமும் அறிவும் போட்டி போட்டு
பார்வையாலே தின்று தீர்த்து விடுகிறது
என் உணர்வு!

உனக்கும் அவ்வாறே
நிகழ்ந்திருக்குமென்றே அவதானிக்கிறேன்

அகத்தை ஆய்ந்து ஆய்ந்தே
பொழுதுகள் தீர்ந்தது...
கடிகார முட்கள் முதலில் உன்ன்னை குத்தியது
பின்பு என்னை குத்தியது
வழக்கம் போல...

ஏதேதோ தேடுகிறேன் என்று
ஏன் என்று கூட கேட்காமல்
டாட்டா கூட சொல்லாமல் உன் பின்னே செல்கிறது
அன்றைய பொழுது!

உனக்கென்ன...
இந்த இரவை விடிய வைக்க
நான்
என்ன பாடு படப்போகிறேனோ?  

No comments:

Post a Comment