Sunday, December 9, 2012

மரண போதை

பிள்ளையாய் இருந்த பொழுதுகள்
தெய்வமாய் வாழ்ந்த பொழுதுகளாம்.
அதனால் தான் அவை நினைவில் நிற்பதில்லை
போலும்...
  
இரத்தம் பார்த்து
அழாமல் அம்மாவின்
திட்டுதலுக்கு அஞ்சிய  பால்யம்

வளர வளர
தனிமை படுத்தப்பட்ட
ஆண் பெண் நட்பு...

கூட்டாஞ்சோறு விளையாட்டில்
அம்மா வேடம் போட்ட
தோழியே
மனைவியாக நினைக்கும்
உள் மனத்தின் கனவு...

திருட்டு  புகை
திருட்டு மது
காசின்றியே கிடைத்தது

கல்வியை கல்வி நிறுவனங்களும்
கலவியை ஹார்மோன்களும்
கற்பித்து கடமையாற்றின 

திருட்டு தனமாய்
பால்யத்திலிருந்து
வாலிபத்திற்கு தாவிய
பருவம்.

திடீரென்று தான்
காதலிக்கிறோம்..
திடீரென்று தான்
காதலிக்கப்படுகிறோம்...

காதல்  காமத்தை
 நோக்கியும்
காமம் பார்த்த காதல்
விலகுதலை விரும்பியும்
கழிந்தன பொழுதுகள்

எல்லாவற்றிலிருந்தும்
மீட்டுக்கொடுத்த காலம்
பிள்ளைகள் பெற்று
அவர்களுக்காய்
இயங்கும் ஏங்கும்  போதையிலிருந்து
மட்டும் மீட்காமலேயே விட்டு விடுகிறது
மரணம் வரை .
 


No comments:

Post a Comment